ஈழத்தின் பிரபல அரும்பொருள் தொல்பொருள் சேகரிப்பாளராக விளங்கிய மாமனிதர் கலைஞானி அவர்களின் 24 ஆவது நினைவு தினம் இன்றாகும்.
அ. செல்வரத்தினம் என்கிற இயற்பெயரைக் கொண்ட கலைஞானி 23 ஆம் திகதி ஆடி மாதம் 1933 ஆம் ஆண்டு வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் உள்ள எமது அயலூரான குரும்பசிட்டியில் பிறந்தார். தமிழினப்பற்றாளராக விளங்கிய அவர் தமிழர்களின் கலாசார சின்னங்கள் அழித்தொழிக்கப்பட்ட போதும், வரலாறுகள் திரிவுபடுத்தப்பட்ட போதும் அவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தார். தனியாளாக தமிழர்களின் தொல்பொருள், அரும்பொருள் ஆவணங்களை சேகரித்து பாதுகாத்து சமூகத்தின் முன் கொண்டு சென்றவர். கலைஞானி அவர்கள் 28 ஆம் திகதி மார்கழி மாதம் 2001 ஆம் ஆண்டு தனது 68 ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
கலைஞானி அ.செல்வரத்தினம் ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைத் தேடிப் பெற்றுப் பாதுகாக்க வேண்டும் என்று தன் வாழ்நாளையே அதற்காகவே அர்ப்பணித்து வந்தவராவார். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காடுகரம்பையெல்லாம் அலைந்து திரிந்து பல அரும் பொருள்களைக் கண்டெடுத்துப் பாதுகாத்தவர்.
இப்பணிக்காக பிரமச்சரிய வாழ்க்கையை மேற்கொண்டு தனது சொத்து சுகங்களை எல்லாம் முழுமையாக அர்பணித்து வாழ்ந்தவர். 1933 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் குரும்பசிட்டி கிராமத்தில் அரியகுட்டி தம்பதிகளின் மகனாகப் பிறந்த இவர் ஆரம்பக்கல்வியை குரும்பசிட்டி பொன்பரமானந்தர் வித்தியாசாலையிலும் பின் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் கல்வி கற்றவர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த இவர் தனது பெரிய தாயாரின் அரவணைப்பிலேயே வளர்ந்தார்.
1947இல் தனது வீட்டு வளவில் கண்டெடுத்த 3 பழைய நாணயங்களையும் சங்கு ஒன்றையும் யூனியன் கல்லூரியில் நடந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தியதாகவும் அதற்குக் கிடைத்த அதிபரின் பாராட்டும் பரிசாக வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கமுமே இப்பணியில் தன்னை ஈடுபடத் தூண்டியதாகவும் கூறுகின்றார்.
வேறு எந்த நிறுவனமோ தனிமனிதனோ செய்யாத, செய்யத் துணியாத இவ் வேலையை, தமிழரின் வரலாற்றுப் பொக்கிசங்களைத் தேடித்தேடி பாதுகாக்கும் பணியைத் தள்ளாத வயதிலும் தனியே நின்று கலைஞானி அவர்கள் செய்து வந்தார்.
பண்டைய நாணயங்களை, கலைப்பொருட்கள், தொல்பொருட்கள், பழைய ஏட்டுச்சுவடிகள், கையெழுத்துப்படிகள் (பிரதிகள்) என்பவற்றை எல்லாம் தன் ஆற்றலுக்கு மீறிய வகையில் பேணிப்பாதுகாத்து வந்தவர்.
1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத்தமிழர் மாநாட்டின் போது சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியில் கலைஞானியின் அரும்பொருட் கண்காட்சி அனைவரையும் வியக்க வைத்தது. இலங்கையில் வேறு எந்த நூதனசாலையிலும் இல்லாத பொருட்கள் அவரிடமிருந்தன. 1975 இல் குரும்பசிட்டி பொன்பரமானந்தர் வித்தியாலயத்தின் 75 வது ஆண்டு நிறைவு விழாவின் கண்காட்சியில் இவரது அரும்பொருட்களும் இடம்பெற்று ஊரவர்களை அதிசயிக்க வைத்தன.
1991 இல் யாழ்.பல்கலைக்கழகத்தில் இவரது மாபெரும் அரும்பொருட்காட்சி தொடந்து 12 நாட்கள் நடந்தது. 1992 இல் நாவலர் கலாசார மண்டபத்திலும், 1993 இல் நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்திலும் 1994 இல் சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் இவரால் சேகரிக்கப்பட்ட அரும்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
1994 இல் தமிழ்ச்சமூகம் எடுத்த முத்தமிழ் விழாவில் கலைஞானி அவர்கள் தேசியத் தலைவரால் “மாமனிதர்” என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். 1986 இல் எமது நாட்டில் வெடித்த உள்நாட்டு யுத்தம் காரணமாக இவரது அரும்பொருட்களில் பெரும்பகுதி அழிக்கப்பட்டும், களவாடப்பட்டும் இழக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பொருட்களை பேணும் வகையில் பரமேஸ்வராச் சந்தி, பலாலி வீதியில் உள்ள ஒரு தனியார் இல்லத்தில் பாதுகாத்து வந்தார்.
இவர் கலைஞானி என எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார். ஈழத்தின் தொல்பொருட்சான்றுகளை சேகரித்த அவற்றை வருங்கால சந்ததிக்க வரலாறாக ஆதாரப்படுத்தும் பணி இன்றும் நினைவுகூரப்படுகிறது.
எத்தனையோ வரலாற்றுச்சின்னங்கள், தொல்பொருட்கள், ஆதாரஅபூர்வங்கள் ஆகியவற்றை தேடி எடுத்து அவற்றை ஆவணப்படுத்தி ஈழத்தின் வரலாற்று இருப்பை ஆதாரபூர்வமாக நிரூபித்தவர். தன் வாழ்நாளில் 55 வருடங்களாக தனியாளாக இப்பணியில் ஈடுபட்டு வந்தார். யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர்களும் இன்றும் இவரது பணியை பாராட்டி இவரைப்பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
குரும்பசிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை வதிவிடமாகக் கொண்டிருந்தார்.1995 இடப்பெயர்வின் போது இடம்பெயர்ந்து நாவற்குழிப்பகுதியில் வசித்து இருந்தார்.
அக்காலப்பகுதியில் இராணுவம் குடாநாட்டின்மீது மேற்கொண்ட ரிவிரச இராணுவ நடடிவடிக்கையின்போது இவர் பாடுபட்ட சேகரித்த அரும்பொருட்கள் பலவும் இராணுவத்தால் அழிக்கப்பட்டு விட்டன.
எம்.ஷாந்தன் சாத்தியகீர்த்தி அவர்களால் தொகுக்கப்பட்டு மாமனிதர் கலைஞானி கலாலயம் - குரும்பசிட்டி அமைப்பால் வெளியிடப்பட்ட கலைஞானியும் - கலைத்தொண்டும் என்ற நூல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
கலைஞானியும் - கலைத்தொண்டும் நூலைப் பார்வையிட இங்கே அழுத்துங்கள்.
கலைஞானி அவர்களின் 24 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு 28.12.2025 ஈழநாடு இதழில் வெளியான கட்டுரை வருமாறு,




Post a Comment