கலைவாணி சனசமூக நிலையமும், குப்பிழான் உப தபால் அலுவலகமும் திறப்புவிழா வெகு விமரிசை 

 

கலைவாணி சனசமூக நிலையமும், குப்பிழான் உப தபால் அலுவலகமும் திறப்புவிழா 14.05.2025 புதன்கிழமை காலை 10 மணிக்கு குப்பிழான் தெற்கில் இடம்பெற்றது.


குப்பிழான் விவசாய சம்மேளனத் தலைவர் செ.நவரத்தினராசா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண பிராந்திய அஞ்சல் அத்தியட்சகர் திரு. S.A.D பெர்னாண்டோ, மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல்துறை ஓய்வுநிலை பேராசிரியர் திரு. க. பாலசுப்பிரமணியம், ஓய்வுநிலை கிராம அலுவலர் செல்லத்துரை ஞானசபேசன், சுன்னாகம் தபாலதிபர் திருமதி கவிதா சிவகுமாரன், வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் செயலாளர் திரு அழகேசன் பிரதீபன், குப்பிழான் தெற்கு கிராம அலுவலர் செல்வி பிரதீபா சுதாகரன், விக்கினேஸ்வரா சனசமூக நிலைய நிர்வாகத்தினர், குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலைய நிர்வாகத்தினர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக ஆர்வலர்கள், வாசகர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


கலைவாணி சனசமூகநிலைய நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்களால் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து  மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. 



அதனைத் தொடர்ந்து கலைவாணி சனசமூக நிலையம் மற்றும் குப்பிழான் உப தபால் அலுவலகத்தின் பெயர்ப்பலகைகள் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டன. 




கலைவாணி சனசமூக நிலையம் மற்றும் உபதபால் அலுவலகம் அமைந்திருந்த பிரதான கட்டிட தொகுதியின் கல்வெட்டினை செ.நவரத்தினராசா தம்பதிகள் இணைந்து திறந்து வைத்தனர்.



யாழ்ப்பாண பிராந்திய அஞ்சல் அத்தியட்சகர் திரு. S.A.D பெர்னாண்டோ அவர்கள் புதிதாக அமையப்பெற்ற உபதபால் அலுவலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார். 


தொடர்ந்து  புதிய இடத்தில் அமையப்பெற்ற அஞ்சல் அலுவலகத்தில் கொடுக்கல் வாங்கல் சேவைகள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.  



அதனைத் தொடர்ந்து மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல்துறை ஓய்வுநிலை பேராசிரியர் திரு. க. பாலசுப்பிரமணியம் அவர்களால் கலைவாணி சனசமூக நிலையம் மற்றும் நூலகம் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.  



தொடர்ந்து கலைவாணி சனசமூக நிலையத்திற்கு நிதி உதவிகளை வழங்கியோர் விபரங்கள் அடங்கிய கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.


 
விருந்தினர்கள் அனைவரும் நிகழ்வில் பங்கேற்று வாசிகசாலைகள், நூல்நிலையங்கள் பெருக வேண்டியதன் அவசியம் குறித்தும், ஒரு கிராமத்துக்கு தபால் அலுவலகத்தின் முக்கியத்துவம் குறித்தும்  சிறப்புரைகளை ஆற்றி இருந்தனர்.





அதில் முக்கியமாக  யாழ்ப்பாண பிராந்திய அஞ்சல் அத்தியட்சகர் திரு. S.A.D பெர்னாண்டோ அவர்கள் உரையாற்றும் போது, 

இக்கிராம மக்களுக்காக புதிய இடத்தில் சேவையாற்ற உள்ள குப்பிழான் உப தபால் அலுவலகம் மேலும் வளர்ச்சியடைய மக்கள் தங்கள் ஒத்துழைப்பை பூரணமாக வழங்க வேண்டும். கிராம மக்கள் வெளியிடங்களுக்கு சென்று நேரத்தையும் மேலதிக பணத்தையும் செலவு செய்யாமல்  இப்போது உங்கள் தபால் அலுவலகம் ஊடாக பத்திற்கும் மேற்பட்ட சேவைகளை வழங்கி வருகிறோம்.  இதன் மூலம் இக்கிராம மக்கள் பெருமளவில் பயனடைய முடியும்.



முக்கியமாக உள்நாட்டு வெளிநாட்டு சாதாரண மற்றும் பதிவு கடித சேவைகள், பொதிகள் சேவை, உள்நாட்டு விரைவு தபால் சேவைகள், வெளிநாட்டு அதி விரைவு தபால் சேவைகள், பட்டியல் கொடுப்பனவுகள் (Bill Payments), மூன்றாம் நபர் வாகன காப்புறுதிக் கட்டணங்கள், வாகன தண்டப்பணக் கட்டணம் செலுத்தும் வசதி, தேசிய சேமிப்பு வங்கியுடன் இணைந்து சிறிய சேமிப்பு கணக்குகள் உள்ளிட்ட பல  சேவைகளை இங்கே பெற முடியும். இதன் மூலம் மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க முடியும். 



விவசாய சம்மேளனத் தலைவர் செ.நவரத்தினராசா அவர்களின் தன்னலமற்ற சேவைகளை நான் நன்கு அறிவேன். அவரது சேவைகளுக்கு உற்சாகமூட்ட வேண்டும் என்பதற்காகத் தான் அவசரமாக கொழும்புக்கு போக வேண்டி இருந்தும் இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக அதனை பிற்போட்டு இங்கே இன்று இந்த நிகழ்வில் பங்கேற்கிறேன். என்றார்.



இறுதியாக விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது. மதியம் 12 மணியளவில் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவடைந்தன. 

எவ்வித முன்னறிவித்தலும் இன்றி நிகழ்வில் பங்கேற்பதை தவிர்த்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களிடம் கலைவாணி சனசமூக நிலையத்தினர் அனுமதி கேட்டு அழைப்பிதழ் அடித்து, கல்வெட்டுகளில் திறந்து வைத்ததாக பெயர் குறிப்பிட்டும் வராததால் சுமார் ஒன்றேகால் மணி நேரங்கள் தாமதித்தே நிகழ்வு ஆரம்பமானது. 

செ. கிரிசாந்- 

















Post a Comment

Previous Post Next Post