கற்கரைக் கற்பக விநாயகர் தேர்த் திருவிழா 2022 (Video)

 


யாழ்.குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா  புதன்கிழமை (10.8.2022) வெகுசிறப்பாக இடம்பெற்றது.

காலை அபிஷேக பூசை, வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான், சண்டேஸ்வரர் ஆகிய முத்தெய்வங்களும் திருநடனத்துடன் உள்வீதியில் எழுந்தருளி முத்தேர்களிலும் எழுந்தருளினர்.

சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு ஓதப்பட்டு அடியவர்களால் சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க, வடம் தொட்டிழுக்க முற்பகல்-11 மணியளவில் முத்தேர் பவனி ஆரம்பமானது.

தேர்த் திருவிழாவை முன்னிட்டுப் பல ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணை எடுத்தும், பறவைக் காவடிகள் எடுத்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும், கற்பூரச் சட்டிகள் எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.

முத்தேர்களும் இருப்பிடம் வந்தடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.

இவ்வாலயத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆலயச் சூழலில் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு அடியவர்களுக்குப் பானங்கள் பரிமாறப்பட்டதுடன் அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் இவ்வாலயத் தேர்த் திருவிழாவில் கிராமத்தவர்கள் மாத்திரமன்றி அயற் கிராமத்தவர்கள் மற்றும் புலம்பெயர் தேசத்தவர்கள் எனப் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டனர்.

தேர்த் திருவிழாக் கிரியைகளை சிவாகம கிரியா கிரம ஜோதி சிவஸ்ரீ. தி.வைத்தீஸ்வரக் குருக்கள், சிவஸ்ரீ.வை.கிருஸ்ணானந்தக் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் சிறப்பாக நிகழ்த்தினர்.

Post a Comment

Previous Post Next Post